Wednesday, September 27, 2017

போனஸ் பேச்சுவார்த்தை (27.09.17 )அனைத்து சங்க தலைவர்களது உரையின் சாராம்சம்

அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம். இன்று 27.09.2017 காலை 11.00 மணியளவில் அனைத்து சங்கங்களுடன் வாரியம் போனஸ்குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

01. சம்மேளத்தின் திரு. இராமச்சந்திரன் அவர்களது உரை : அனைவருக்கும்  25%  சதவீதம் போனஸ் .காலியிடம் அதிகம் உள்ளதால் 20 சதவீதத்தினை உயர்த்தி தர வேண்டும். இன்று அவர்களது சங்க சென்னை மண்டல மாநாடு நடைபெறுவதால் மதியம் 12.00 மணிக்கு மேல் செல்ல உள்ளதாகவும் அனைவரும் தவறாக எண்ணாமல் பொறுத்தருள கோரினார். போனஸ்   தீபாவளிக்கு 15 நாட்கள் முன்னதாக வழங்க கோரினார்.



02. TNEB AESU   பொதுச் செயலாளர்  திரு.சந்திரசேகரன் அவர்களது உரை : கடந்த 23.09.2016 இதே போன்று போனஸ்  பேச்சுவார்த்தை நடைபெற்றதினை நினைவு கூர்ந்தார். அனைவருக்கும் 25 %  சதவீதம் போனஸ்  மற்றும் தீபாவளிக்கு முன்னதாக வழங்க கோரினார்.

03. T.M.T.M  பொதுச் செயலாளர் திரு.சிங்கார. இரத்தினசபாபதி அவர்களது உரை : இந்த பேச்சுவார்த்தை ஒரு வார காலத்திற்கு முன்னதாக நடந்திருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு  ஆணை அறிவித்த பிறகு தாமதமாக வாரியம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதினை குறிப்பிட்டார். 04.10.17 அன்று தாங்கள் அழைப்பீர்கள் என நினைத்ததாகவும் முன்கூட்டியே அழைத்ததற்கு நன்றி என்றார். தி.மு.க. ஆட்சியில் உயர்த்தி வழங்கப்பட்ட சதவீதம் அப்படியே உள்ளது. உயர்த்தி வழங்க வேண்டும் என குறிப்பிட்டார். அனைவருக்கும் 25 %  சதவீதம் போனஸ்  மற்றும் தீபாவளிக்கு முன்னதாக வழங்க கோரினார்.  மற்றும் ஊதிய உயர்விற்காக இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும் காலதாமமாகிறது. தற்போது போக்குவரத்து துறையில் அறிவிப்பு வெளியாகி உள்ளதினை குறிப்பிட்டார்.

04. சி.ஐ.டி.யு சங்க தலைவர் திரு.S. சுப்பிரமணியன் அவர்களது உரை : இந்த பேச்சுவார்த்தை சம்பிராதயத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கருதுவதாக தெரிவித்தார். மின்சார கொள்முதல் பணம் குறைக்கப்பட்டதினை பாராட்டினார். வாரியம் லாபம் ஈட்டி வருவதால் போனஸ் 30 சதவீதம் வழங்கிட கோரினார். பல ஆண்டுகளாக 20 சதவீதம் கல்லுப் பிள்ளையார் போல அப்படியே உள்ளதாகவும் உயர்த்தி தர வேண்டும் என தெரிவித்தார். அதிகாரிகள், செவிலியர், ஒப்பந்த தொழிலாளர், அவுட் சோர்சிங் பணி புரிகிறவர்கள் அனைவருக்கும் 30 சதவீதம் வழங்கிடவும், ஊதிய உயர்வு இது போன்று தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உடன் முடித்திடவும் கேட்டுக் கொண்டார். ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை வருடா வருடம் குறைத்து அவர்களுக்கு கருணைத் தொகை வழங்குவதாக கணக்கு காட்டுகிறீர்கள். இன்றும் பலர் பணிபுரிந்து வருகின்றனர் என்பதனை நினைவு படுத்தினார். மேலும் நிலுவையில் உள்ள ரூ.8400 வழங்கிடவும்,   வைரவிழா ஆண்டிற்கு  ஆண்டுதீயம் உயர்வு வழங்க ஏற்கனவே கடிதம் அளித்துள்ளதாகவும் அதனை வழங்கிடும்படியும் கோரினார்.

05. அண்ணா தொழிற் சங்க தலைவர் திரு.விஜயரங்கன் அவர்களது உரை: வாரியம் ரூ.3500 இருந்ததை ரூ.7000 ஆக உயர்த்தி அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது எனவும் மற்றும்  அவர்கள் ஆட்சியில் ரூ.8400 என்பது ரூ.16800 வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார். இந்த தருணத்தில் அதற்கு பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு. செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கும் மின்துறை அமைச்சருக்கும் வாரிய தலைவருக்கும் மற்றும் அனைத்து உயரதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். நட்டத்தில் இருந்து வாரியம் லாபத்தினை நோக்கி செல்வதினை குறிப்பிட்டார். மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகளை தற்போது அவரது சங்க முயற்சியால் வழங்கப்பட்டதினை நினைவு கூர்ந்தார். அதற்கு வாரியத்திற்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அனைவருக்கும் 25 சதவீத போனஸ் மற்றும் ஓய்வு பெற்றவர்கட்கு மற்றும் ஒப்பந்த தொழிலாளருக்கு ரூ.6000 வழங்கிடவும் கோரினார். அதிகாரிகளுக்கு கருணைத் தொகையினை தீபாவளிக்கு வழங்கிடவும் கோரினார்.

06. ஜனதா சங்க துணை பொதுச் செயலாளர் திரு.சு.பாரி அவர்களது உரை :  மின்துறை அமைச்சர் அவர்களது நமது தொழிலாளர்களின் பணியினை அதாவது வார்தா புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பணியினை பாராட்டியுள்ளார். காலிப்பணியிடம் அதிகம் இருந்தும் வேலைப்பளு அதிகம் இருந்தும் அனைவரும் பணியாற்றுகின்றனர். ஆகவே அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்கிடவும்,  அதிகாரிகளுக்கு கருணைத் தொகை வழங்கிடவும், களப்பிரிவில் காலியிடம் நிரப்பப்படாமல் ஆண்டுக்கணக்கில் உள்ளதால் அதனை களைய வாரிய தொழிலுறவு ஆலோசகர் அவர்கள் தலையிட்டு இதனை களைந்திட பலமுறை கடிதம் அளித்து பேசியுள்ளோம். ஆனால் தாமதமாவதினை உடன் களைந்து பதவி உயர்வு வழங்கிடவும், வைர விழா ஆண்டூதியம் தொடர்பாக அனைத்து சங்கங்களும் கடிதம் அளித்து பேசி உள்ளது. அதனை உடன் வழங்கிடவும், அதே போன்று ஊதிய உயர்வினை உடனடியாக முடித்திட வேண்டும் எனவும் கோரினார்.

07. ஐ.என்.டி.யு.சி. தலைவர் திரு. சேவியர் அவர்களது உரை : சம்பிராதயமான பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக குறிப்பிட்டார். ஊதிய உயர்வு 22 மாதங்கள் ஆகி உள்ளது. இடைக்கால நிவாரணம் ரூ.2000 வழங்கிடவும், வைரவிழா 2 ஆண்டூதிய உயர்வு வழங்கிடவும், அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்கிடவும், அதிகாரிகளுக்கு கருணைத் தொகை வழங்கிடவும், பாக்கி உள்ள ரூ.8400 வழங்கிடவும் களப்பணியாளர் பதவி உயர்வு உடன் வழங்கிடவும், போனஸ் பணத்தினை எவ்வளவு விரைவில் வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்கிடவும் கோரினார்.

08. ஐ.என்.டி.யு.சி. சுவர்ணராஜ் குருப் சங்க பொறுப்பாளர் உரை : அனைவருக்கும் 25 சதவீத போனஸ் வழங்கிட கோரினார்.

09. இன்ஜினியர்ஸ் சங்க பொதுச் செயலாளர் திரு.பத்ரி நாராயணன் அவர்களது உரை : போனஸ் 25 சதவீதம் வழங்கிடவும், அதிகாரிகளுக்கு ரூ.5000 வழங்கிடவும். பொங்கல் அப்போது இனாம் என்ற பெயரில் வழங்கிடுவதினை நிறுத்தி விடவும். ரூ.5000 த்தினை அனைவருக்கும் வழங்கும் தீபாவளி அன்று வழங்கிடவும் கோரினார்.  வைரவிழா 2 ஆண்டூதிய உயர்வு வழங்கிடவும் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்கிடவும் கோரினார்.  இந்த வருடமாவது பொங்கல் அன்று பணம் வழங்காமல் தீபாவளி அன்று வழங்கிட இந்த கமிட்டி அரசிடம் தெரிவித்து வழங்கிட மீண்டும் கோரினார்.

10. N.L.O பொறுப்பாளர் அவர்களது உரை :  அனைவருக்கும் போனஸ் 25 சதவீதம் அதிகாரிகளுக்கு ரூ.5000, வைரவிழா 2 ஆண்டூதியம், இடைக்கால நிவாரணம் ஆகிவற்றினை குறிப்பிட்டு வழங்கிட கோரினார்.

11. தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களது உரை : 42000 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்பிட கோருவதுடன் வாரிய லாப கணக்கில் இந்த காலிப்பணியிடங்களுக்கான செலவுகள் பணியிடம் நிரப்பப்படாததால் லாப கணக்கினை காட்டுவதினை கண்டித்தார்.  மேலும் களப்பணி பதவி உயர்வில் வாரிய தலைமை சரியாக நடந்து கொள்ளவில்லை. நீதிமன்ற வழக்குகளில் அரசு விரைவில் நடத்திடுவது போன்று உதாரணமாக நீட் தேர்வு பற்றி குறிப்பிட்டு அதே போன்று வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதினால் ஏற்படும் பாதிப்பினையும் மற்றும் புதிய பணியிடங்கள் நிரப்பட முடியாமல் உள்ளதினை வாரியம் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கினை விரைவாக நடத்தி முடித்திட வேண்டும் என குறிப்பிட்டார். அனைவருக்கும் 25 சதவீத போனஸ் வழங்கிடவும் வரும் 5-ம் தேதிக்குள் வழங்கிடவும், வைரவிழா ஆண்டூதிய உயர்வு மற்றும் இடைக்கால நிவாரணம் போன்றவற்றினையும் குறிப்பிட்டு பேசினார்.

12. இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் பொதுச் செயலாளர் திரு. N.மதிமாறன் அவர்களது உரை: அதிகாரிகளுக்கு ரூ.5000 வழங்கிடவும், பணிமூப்பு விதிகளில் திருத்தம் செய்திட வேண்டும் எனவும், உதவி செயற் பொறியாளரிலிருந்து செயற் பொறியாளர் பதவி உயர்வில் உள்ள குறைகள் தொடர்பாகவும் பேசினார். மேலும் மற்ற அரசுத் துறைகளில் உதவி பொறியாளர் ஊதியம் 15000 ஆரம்ப நிலை ஆனால் வாரியத்தில் 10100 அதனை மாற்றிடவும் பேசினார்.

13. மின் வாரிய நிதி மற்றும் கணக்கு பிரிவு அலுவலர்கள் சங்க பொறுப்பாளர் அவர்களது உரை : பணியாளர்களுக்கு வழங்குவது போல அதிகாரிகளுக்கும் கருணைத் தொகையினை வழங்கிடவும், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடவும் கோரினார்.

14. பி.எம்.எஸ் சங்க பொதுச் செயலாளர் திரு.மணி  அவர்களது உரை : வாரியத்தில் கணக்கீட்டு பிரிவில் வாரிய வருவாய் சரியாக கணக்கீடு செய்வதும் அதனைத் தொடர்ந்து வசூலிப்பும் சரியாக நடப்பதால் வாரியம் லாபத்தில் இயங்குவதாகவும். அனைவருக்கும் கருணைத் தொகை மற்றும் போனஸ் 25 சதவீதம் வழங்கிடவும், விடுபட்ட ரூ.8400 வழங்கிடவும், தற்போது தமிழக அரசு அகவிலைப்படி வழங்க உள்ளதாக செய்திகள் வருகிறது. ஆகவே அதனை அறிவித்தால் வாரியமும் உடன் அறிவித்து போனஸ், அகவிலைப்படி உயர்வு அனைத்தும் தீபாவளிக்கு முன்னதாக வழங்கிடவும், கருணைத் தொகையினை அதிகாரிகளுக்கு தீபாவளிக்கு வழங்கிடவும், இடைக்கால நிவாரணம் இல்லாமல் உடன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி வழங்கிடவும். இருவழிப்பாதை பதவி உயர்வினை செட்டில்மெண்டில் உள்ளவாறு அமுல்படுத்திடவும் கோரினார்.

15. TNEB Card Billing Staff Union  பொறுப்பாளர் துரை.இரத்தினவேலன் அவர்களது உரை : மின்துறை அமைச்சர் வாரிய தலைமையத்திற்கு வருவதும் போவதும் தெரிவதில்லை. அவ்வளவு எளிமையாக நடந்து கொள்வதினை குறிப்பிட்டு அதே போன்று முதலமைச்சரும் மற்றும் அரசும் உள்ளதாக குறிப்பிட்டு பேசினார். லாபம் அதிகரித்தும் நட்டம் குறைந்தும் உள்ளதினை குறிப்பிட்டார். 40000 காலிப்பணியிடங்கள் கணக்கீட்டாளர் 2500 காலியிடம் கணக்கீட்டாய்வாளர் 2000 காலியிடம் உள்ளதினை குறிப்பிட்டு நிரப்பி வாரிய வருவாயை பெருக்கிட வேண்டும் என குறிப்பிட்டார். 25 சதவீத போனஸ், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ10000 அதிகாரிகளுக்கு பிடித்தம் இல்லாமல் ரூ.10000 ஓய்வு பெற்றவர்கட்கு ரூ.5000  ஆகியவற்றை 15 நாட்களுக்கு முன்னதாக அளித்திடவும், 01.12.15 மொத்த சம்பளத்தில் 10 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கிடவும், வைரவிழா 2 ஆண்டூதிய உயர்வினையும், விடுபட்ட போனஸ் ரூ.8400 வழங்கிடவும் கோரினார்.

16. அம்பேத்கார் தொழிற் சங்க பொதுச் செயலாளர் திரு.சாமி அவர்களது உரை : போனஸ் பேச்சுவார்த்தை முன்கூட்டி கூப்பிட்டு நடத்தியிருக்க வேண்டும் எனவும், 25 சதவீத போனஸ் வழங்கிடவும், ரயில்வேயில் ரூ.17951 வழங்குவது போல போனஸ் 20 சதவீதத்தினை உயர்த்தி வழங்கிடவும், மின் வாரியத்தில் மட்டும்தான் தொழிற் சங்க ஒற்றுமை உள்ளதாகவும் குறிப்பிட்டு பேசினார். களப்பணி பதவி உயர்வில் பி.எம்.எஸ் சங்கம் வாபஸ் பெற வேண்டும் எனவும் அப்படி இல்லை எனில் அனைத்து சங்கங்களும் கூட்டு சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கில் சேர்ந்திட வேண்டும் (என சொன்ன போது AESU    திரு.சந்திரசேகரன் அவர்கள் குறிக்கிட்டு கேஸ் முடிவுற்று தீர்ப்பின் நகல் கிடைக்க தாமதமாவதினை குறிப்பிட்டார்.)  மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், அவுட் சோர்சிங் பணிபுரிகிறவர்களுக்கு ரூ.6000 வழங்கிட வேண்டும் எனவும் கோரினார்.

17. TNEB Engineers Union பொறுப்பாளர் உரை : வாரியம் லாபம் ஈட்டியுள்ளதினை குறிப்பிட்டும், பராமரிப்பு செலவு குறைக்கப்பட்டதினையும், உற்பத்தி உயர்வு 89 சதவீதம் எனவும்  இந்திய அளவில் 80 சதவீதம்தான் எனவும் குறிப்பிட்டும், மேட்டூர் அனல் மின் நிலையம் தொடர்ச்சியாக 377 நாட்கள் பணியாற்றியது பற்றியும் குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார். பிரேக்டவுன் குறைப்பு, வார்தா புயல் 41 நாட்களில் முடித்ததினை பாராட்டியும், 100 சதவீதம் கணக்கீடு மற்றும் வசூல் நமது வாரியத்தில் மட்டும்தான் என குறிப்பிட்டார். ஆனால் ஊழியர் பற்றாக்குறை இருப்பினும் இவையனைத்தும் நிறைவேற்றியதற்காக அனைவருக்கும் 20 சதவீதத்திற்கும் அதிகமாக போனஸ் வழங்கிடவும், இனாம் என்ற பெயரில் பொங்கல் அப்போது வழங்கப்படும் பணத்தினை பற்றி குறிப்பிட்டு ரூ.1000-த்தில் இன்கம்டாக்ஸ் 300 ஜி.எஸ்.டி 150 ஆக 550 பணம்தான் அதனை வைத்து என்ன செய்வது ஆகவே அதனை இனாம் என அழைக்காமல் அரசே இலவசத்தினை விலையில்லா என மாற்றி அழைக்கிறது.  ஆகவே அதிகாரிகளுக்கு தீபாவளி  அன்றே கருணைத் தொகையினை வழங்கிடவும், வைரவிழா ஆண்டூதிய உயர்வு, பென்ஷர்ஸ் கார்ப்பஸ் பண்ட் பற்றி குறிப்பிட்டும் காமன் சீனியாரிட்டிபற்றி குறிப்பிட்டும் பேசினார்.

      இறுதியாக வாரிய நிதி இயக்குநர் அவர்கள் சங்கத் தலைவர்கள் அனைவரது கோரிக்கையும் குறிப்பிடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசிடம்  தெரிவித்து விரைவில் போனஸ் வழங்கிடுவதாகவும் வாரிய வருவாய்க்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டு  அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

No comments:

General Continuance Post in Kanchipuram EDC for the period upto 28.02.24

Gen.Cont.Post in Kanchipuram EDC