2015-16-ஆம் ஆண்டில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகள் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:
''தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் அலகு-1-ல் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பாக ரூபாய் 21.99 கோடி செலவில் அமைக்கப்படும்.
வடசென்னை அனல் மின்நிலையம்-1-ன் வெளிப்புற நிலக்கரி கையாளும் அமைப்பில், நிலக்கரியை சுமந்து செல்லும் பல்வேறு அளவுள்ள எஃகு தடுப்புகளை உடைய எஃகு நகர்த்திப் பட்டைகள் ரூபாய் 11.51 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம் சுமார் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
மேட்டூர் மின் பகிர்மான வட்டம், எடப்பாடியில் புதிய மின் பகிர்மான கோட்டம் புதிய கட்டிட வசதியுடன் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மின் தடை புகார் மையங்களை பலப்படுத்த கணினிமயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையங்கள் திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூரில் ரூபாய் 0.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மேட்டூர் அனல் மின் நிலையம் 1-ல் இரண்டாவது அலகில் உள்ள உலையின் காப்புக்கருவி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ரூபாய் 7.68 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்பத்துடன் புதுப்பிக்கப்படும்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஐந்தாவது அலகில் உள்ள சுழலியின் கட்டுப்பாட்டு அமைப்பு ரூபாய் 5.14 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
குறளகம் கட்டிடம் மற்றும் மருத்துவ சேவை இயக்குனரக வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் சூரிய சக்தி மின் கலன் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கிராமத்திற்கு தேவையான மின்சாரத்தை அதே கிராமத்தில் சூரிய சக்தி கலன் மூலமாக தயாரிப்பதற்கு ஒரு முன்னோடித் திட்டம் ரூபாய் 2.06 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இரும்பை கிராமத்தில் செயல்படுத்தப்படும்.

வீணாகும் வெப்பசக்தியை மீட்கவல்ல முறையின் மூலம் எரிசக்தி சேமிப்பினை அடைவதை உறுதி செய்ய, காற்று சூடாக்கியை , பொது நிறுவனமான அரிசி ஆலைகளின், 10 ஆலைகளில் ரூ.30 லட்சம் செலவில் மூன்று ஆண்டுகளில் மின் ஆய்வுத் துறையால் பொருத்தப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், 2015-16 ஆம் ஆண்டில் நேரடி நியமனம் மூலம் 900 தொழில் நுட்ப பதவிகளுக்கான காலிப் பணியிடங்களும், 750 தொழில் நுட்பமல்லாத பதவிகளுக்கான காலிப் பணியிடங்களும் மற்றும் 300 தொழில் நுட்ப பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் உள்முகத் தேர்வு மூலமாகவும் ஆக மொத்தம் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்.
2015-16-ஆம் ஆண்டில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்'' என்று நத்தம் விஸ்வநாதன் பேசினார்.